Tuesday 10 January 2017



கரிசல் திரைவிழா 2017


Thursday 11 February 2016

11வது கரிசல் திரை விழாவில் சென்னை பல்கலைக்கழகம் முதலிடம்

11வது கரிசல் திரை விழாவில் வெற்றி பெற்ற சென்னை பல்கலைக்கழக மாணவ மாணவிகள்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தில் நடைபெற்ற கரிசல் திரை விழாவில் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் ஒட்டுமொத்த கோப்பையைப் வென்றனர்.

வ.உ.சி.அரங்கில் நடைபெற்ற நிறைவு விழாவில் துறைத்தலைவர் பெ.கோவிந்தராஜு, கூட்டுக்குழு உறப்பினர்  ராதாகிருஷ்ணன் நாயர் மற்றும் பதிவாளர் ஜான் டி பிரிட்டோ, எழுத்தாளர் நாறும்பூ நாதன் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக பத்திரகையாளர் சமஸ் பங்கேற்று உரையாற்றினார்.

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் ஒட்டுமொத்தக் கோப்பையைக் கைப்பற்றினர். பாளையங்கோட்டை துய சவேரியார் பள்ளி மாணவர்கள் இரண்டாவது இடம் பெற்றனர்.

விழாவில் பேசய பத்திரிகையாளர் சமஸ், ‘பத்திரிகையாளன் என்பவன், நாம் எங்கு இருக்கிறோம் என்பதைவிட எவ்வளவு சுதந்திரமாக இயங்குகிறோம் என்பது மிக முக்கியமானது. இதன் மூலமாகவே அவனால் மக்களுக்கு தேவையான செய்திகளை கொண்டு செல்ல முடியும்.  

தொழில்நுட்பம் படித்தவரும், இதழியல் படித்தவரும்  ஊடகங்களில் பணிபுரிகிறார்கள். இருவரையும் பிரித்துக் காட்டுவது என்பது ஆழ்ந்த வாசிப்பு மட்டுமே. ஆழ்ந்த வாசிப்பு என்பது ஒரு தியான நிலையைப் போன்றது. இதன் மூலமாகவே மனதை ஒருமுகப்படுத்தி நம்மால் இதழியல் துறையில் பணியாற்ற முடியும். இதை தவிர ஒருவரின் தன்னூக்கமிக்க செயல்பாடே அவரை தனித்த அடையாளமாக இருக்கும். 

பத்திரிகையாளர்கள் அனைத்து துறையிலும் வித்தகராக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக தன் சுற்றுச்சூழலை நன்கு கவனித்து அதற்கு ஏற்ற வகையில் செயல்படவேண்டிய ஆர்வம் தான் அவசியம். இவைய அனைத்தையுமே புத்தக வாசிப்பு என்னும் தியானம் மூலம் பெற முடியும். 

ஆனால், இன்றைய காலத்தில் வாசிப்பு என்பதே அருகிவிட்டது என்று சொல்லிவிட முடியாது. உதாரணமாக, யாருடைய கையிலும் கடிகாரம் இல்லை என்பதற்காக மணி பார்க்கும் பழக்கமே ஒழிந்துவிட்டது எனச் சொல்ல முடியுமா? அதுபோலவே இன்றைய காலக்கட்டத்தில் துரித வாசிப்பு என்னும் பழக்கமே உள்ளது. இது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டிய ஒன்றாகும். 

ஒரு நிகழ்வை செய்தியாக மக்களுக்கு கொடுக்க கூடிய எவரும் செய்தியாளர் ஆகலாம். ஆனால், செய்தி மக்களுக்கான தேவை உணர்ந்ததாக இருக்க வேண்டும்.’ என்று கூறினார்.

-Media Team, 11th Karisal Thirai Vizha 2016

Thursday 4 February 2016

இந்தியாவின் வண்ணங்கள் எண்ணற்றவை: ஹென்க் ஒச்சப்பன் - பத்திரகைச் செய்தி

நெல்லை, பிப் 4: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கரிசல் திரை விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்.
வ.உ.சி கலையரங்கில் நடந்த புகைப்படப் போட்டியில் பெல்ஜியத்திலிருந்து வந்திருந்த புகைப்படக் கலைஞர் ஹென்க் ஒச்சப்பன் மாணவர்களின் புகைப்படங்களை முன்வைத்துப் பேசினார். தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
அப்போது பேசிய ஹென்க் ஒச்சப்பன், ‘மதுரையில் ஜல்லிக்கட்டைப் புகைப்படம் எடுத்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம். இதுவரை எனது புகைப்படங்களில் சிறந்த படம் என்று அதைத்தான் சொல்வேன். ஏனென்றால், ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வு. அதனைத் தடைசெய்தது கவலைக்குரியது. என் புகைப்படங்களில் அடர்த்தியான வண்ணங்களையே பயன்படுத்துகிறேன். வண்ணங்கள் காலம் கடந்தும் அந்த தருணத்தை உயிர்போடு மீட்டுத்தரும். உற்சாகமூட்டும். அதற்காகே நான் வண்ணங்களை மிகவும் நேசிக்கிறேன். முதலில் அரவிந்தர் பற்றி அறிவதற்காகத்தான் இந்தியா வந்தேன். ஆனால், இந்த நாட்டின் எண்ணற்ற வண்ணங்கள் எனக்கு வியப்பை ஏற்படுத்தின. இங்கே நான் கண்டவற்றை சரியாகப் பகிர்ந்துகொள்ள என்னிடம் வார்த்தைகள் இல்லை. அதனால், புகைப்படங்களில் அவற்றைச் சொல்கிறேன்’ என்று கூறினார்.
இந்த நிகழ்வில், துறைத்தலைவர் பெ.கோவிந்தராஜு மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, சிரிய நாட்டு இயக்குநர் ரூபன் லகட்டொல்லாவின் ஆவணப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடந்தது.

-Media Team, 11th Karisal Thirai Vizha 2016

Wednesday 3 February 2016

11வது கரிசல் திரை விழா தொடக்கம் - பத்திரி்கைச் செய்தி

நெல்லை, பிப் 03: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 11வது கரிசல் திரை விழா புதன்கிழமை தொடங்கியது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொடர்பியல் துறையின் மனோ மீடியா கிளப் சார்பாக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது கரிசல் திரை விழா. இந்த விழாவில் 300க்கும் மேற்பட்ட ஊடகத்துறை மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். மூன்று நாள் நிகழ்வுகளின் தொடக்க விழா புதன்கிழமை காலை பல்கலைக்கழக வ.உ.சி. அரங்கில் நடந்தது.

தொடக்க விழாவில், பல்கலைக்கழகக் கூட்டுக்குழு உறுப்பினரும் தொடர்பியல் துறை தலைவருமான முனைவர்.பெ.கோவிந்தராஜு வரவேற்புரையாற்றினார். பதிவாளர் முனைவர்.அ.ஜான் டி பிரிட்டோ விழாவைத் தொடங்கிவைத்துப் பேசினார். கூட்டுக்குழு உறுப்பினர் முனைவர் ராதாகிருஷ்ணன் நாயர் தலைமையுரை ஆற்றினார். மனோ மீடியா கிளப் தலைவர் ஹார்ட்லின் ஜெனித்த ரால்ஃப் மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்வுகளை அறிமுகம் செய்தார். திரைப்பட ஆய்வாளரும் நடிகருமான யூகி சேது மற்றும் ‘கோடை மழை’ படத்தின் இயக்குநர் கதிரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய யூகி சேது, “மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சாதாரண மனிதனைப் போலவே தன் வாழ்வை அமைத்துக்கொண்டார். ஆனால், அவர் சாதாரணமானவர்களில் அசாதாரணமானவராக இருந்தார். அவர்தான், கனவுகளின் வழியே தங்கள் திறமையை அறிய இளைஞர்களை ஊக்குவித்தார். நம் முன்னோர்கள் உலகிற்கே முன்னோடிகளாகத் திகழ்பவர்கள். அவர்கள் அறிந்துசொன்னவற்றை மறந்துவிட்டது தான் நாம் செய்த தவறு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நமது முன்னோடிகளிடம் கடவுள் பற்றிய அக்கரை இல்லை. அதனால் தான் பல கடவுளர்களை நம் சமூகம் பெற்றது. அவர்களுடைய கற்பனை வளமும் அதற்குக் காரணமாக இருந்தது. தற்கால சினிமாவில் தடம்பதிக்க நினைப்பவர்களுக்கு வகுப்பறையைத் தாண்டிய கல்விதான் அவசியம். நியூட்டன் மரத்தடியில் ஈர்ப்புவிசையைக் கண்டுபிடித்தைப் போல புதிய சிந்தனைகள் அப்போது தான் உருவாகிறது. வாழ்வில் எந்த நிலையை எட்டுவதும் சாத்தியம். அதற்கு நம் திறமையை மட்டும் நம்பி அழைப்பதே அவசியம்” என்று கூறினார். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

விழாவில் பேசிய இயக்குநர் கதிரவன், “திரைப்படங்கள் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும். இதுவரை ஓவியங்கள், கல்வெட்டுகள் மற்றும் சுவடிகள் மூலம் வரலாற்றை அறிந்திருக்கிறோம். எதிர்காலத்திற்கு இப்போதைய திரைப்படங்களும் வரலாற்று ஆவணம் தான்” என்று கூறினார்.

முன்னதாக, புகைப்படக் கலைஞர் ஹென்க் ஒச்சப்பன் மற்றும் யூகி சேது ஆகியோர் மாணவர்களின் புகைப்படக் கண்காட்சியை தொடங்கிவைத்து பார்வையிட்டனர்.

விழாவில் தேர்வாணையர் பிரபாகரன், தொலைநிலைக் கல்வி இயக்குநர் கண்ணன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக, மனோ மீடியா கிளப் துணைத்தலைவர் மாரீஸ்வரி நன்றி கூறினார்.

-Media Team, 11th Karisal Thirai Vizha 2016